செங்கோட்டையில் மாம்பழ சீசன் சூடுபிடிப்பு: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
செங்கோட்டை: செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழ சீசன் சூடுபிடித்துள்ளது. இங்கு விளையும் மாம்பழங்கள் துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முக்கனிகளிலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படுவது மாங்கனி. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி மா விளைச்சலுக்கான சீதோஷ்ண நிலையை கொண்டு விளங்குவதாலும், இப்பகுதியின் மாசுபடாத மண் மற்றும் தண்ணீராலும் மாம்பழம் மிகவும் ருசியாக இருக்கும். செங்கோட்டை, புளியரை, தெற்குமேடு, இலஞ்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர்களில் மா சாகுபடி செய்யப்படுகிறது.
நீலம், செந்தூரம், கல்லாமை, பங்கணப்பள்ளி, பஞ்சவர்ணம், மல்கோவா, இமாம்பசந்த் உள்ளிட்ட பல்வேறு வகை மாம்பழங்கள் இங்கு விளைகிறது. இதே வகை மாம்பழங்கள் தமிழகத்தில் பிற பகுதிகளிலும், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் விளைந்த போதிலும் இப்பகுதியில் விளையும் மாம்பழங்களுக்கு தனி ருசி உள்ளது. இப்பகுதியில் விளையும் மாம்பழங்கள் அகமதாபாத், கொல்லம், கோட்டயம், திருவல்லா உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மாங்கோ பல்ப் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட தரமான மாம்பழங்கள் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக துபாய், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மா விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த ஆண்டு மா விளைச்சல் நன்கு இருக்கின்றபோதிலும் அவற்றுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். மா விளைச்சல் இல்லாத பல மாநிலங்களில் மாங்கோ பல்ப் தொழிற்சாலை அமைத்து லாபகரமாக தொழில் நடத்தும் நிலையில், மா அதி்கமாக விளையும் செங்கோட்டை போன்ற பகுதிகளில் இது போன்ற தொழிற்சாலைகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் விவசாயிகளின் நலனிற்காக உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து உத்திரவாதம் அளித்த போதிலும் இது போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டமடைந்து வருகின்றனர்.
எனவே, இப்பகுதியில் உள்ள மா விவசாயிகள் நலன் கருதி மாங்கோ பல்ப் போன்ற தொழிற்சாலை உருவாக்கவும், மாம்பழம் ஏற்றுமதியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் விரும்புகின்றனர். நினைத்தாலே நாவில் தித்திப்பை ஏற்படுத்தும் மாம்பழத்தை உற்பத்தி செய்யவும், விவசாயிகளின் வாழ்வை இனிப்பாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர்.