நாளை பிளஸ் 2 மார்க் ஷீட் வழங்கப்படும்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் நாளை (புதன்கிழமை) மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் (தட்கல் சிறப்பு அனுமதி திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் உள்பட) தங்களின் தேர்வு மையங்களிலும் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர் மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளே தங்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்த உடனேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் அட்டை வழங்கப்படும். இந்த பணி நாளை முதல் 15 நாட்களுக்கு நடக்கும்.
பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு வரும் ஜூன் மாதம் 22-ம் தேதி துவங்கி ஜூலை 2-ம் தேதி முடிவடையும்.
காலை நடைபெறும் தேர்வுகள் 10 மணி முதல் பகல் 1.15 மணி வரையும், மதியம் நடக்கும் தேர்வுகள் பிற்பகல் 2 மணி மாலை 5.15 மணி வரையும் நடத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications