ஏமனில் சிக்கியுள்ள தமிழக நர்சுகளை மீட்க மத்திய அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: ஏமனில் உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக செவிலியர்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவை பதவி விலகக் கோரி எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பழங்குடியினர் போராடுகின்றனர். இந்த உள்நாட்டுப் போரில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஏமன் நாட்டு ராணுவ மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் பணிபுரிகின்றனர்.
போராட்டக்காரர்கள் ராணுவ முகாம்களையும், மருத்துவமனையையும் தாக்கி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக தமிழக செவிலியர்கள் உணவின்றி, உறக்கம் இன்றி உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளனர்.
ராணுவத்தினரும் தங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக செவிலியர்களை வெளியேற அனுமதிக்கவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் அங்கு தவிக்க, அவர்களது உறவினர்கள் இங்கு கவலைப்படுகின்றனர்.
எனவே, ஏமனில் சிக்கித் தவிக்கும் தமிழக செவிலியர்களை உடனடியாக மீட்கவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு உடனே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.