கோவையி்ல் மொபைல் விற்பனையாளர்களிடம் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல்
கோவை: கோவையில் செல்போன்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
எண்ணற்ற கடைகள்
தமிழகத்திலுள்ள பிற மாவட்டங்களைவிட கோவையில் தான் செல்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். இதனால் கோவையில் திரும்பிய பக்கமெல்லாம் செல்போன் கடைகள் முளைத்துள்ளன. குறிப்பாக காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் ரோடு, நூறடி ரோடு ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான செல்போன் கடைகள் உள்ளன.
நூதன மோசடி
மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் நூதன முறையில் மோசடி நடந்துள்ளது. நூதன மோசடி கும்பலில் இருந்து ஒருவர் முதலில் கடைக்கு வந்து ஒரே மாடலில் 5 போன்களை விலைக்கு வாங்கிச் செல்வார். அவரே இரண்டு நாட்கள் கழித்து வந்து 10 போன்கள் வாங்குவார்.
அடுத்த வாரம் வந்து 30 போன்கள் வாங்குவார். கடைக்காரர் 'அடேங்கப்பா" என வியந்து அந்த நபரிடம் பேச்சுக்கொடுப்பார். வருகிற நபர் கோவையின் பிரபல நிறுவனங்கள் பலவற்றின் பெயர்களைச் சொல்லி அவற்றின் ஊழியர்களுக்கு செல்போன் மொத்த சப்ளை செய்யும் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், பணம் இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் செல்வதாகவும் கூறுவார்.
நல்ல வியாபார வாய்ப்பு என கடைக்காரர் அவருக்கு கடன் கொடுக்க முடிவு செய்வார். அப்புறம் ஒரே நாளில் 100 அல்லது 200 போன்களை வாங்கிக்கொண்டு அப்புறம் கடைப்பக்கமே மேற்படி நபர் வரமாட்டார். அவரது எண்களைத் தொடர்பு கொண்டால் 'நாட் ரீச்சபிளாக" இருக்கும். அவர் கொடுத்த முகவரிக்குச் சென்றால் அங்கே ஏதாவது இடிந்த கட்டிடம் இருக்கும்.
திருடனுக்கு கொட்டிய தேள்
பெரும்பாலான செல்போன் கடைக்காரர்கள் பில் இல்லாமல் வியாபாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொள்முதல் செய்கையிலும் பில் கிடையாது. விற்கும்போதும் பில் கிடையாது. எனவே, இது குறித்து காவல்துறையில் புகார் செய்ய முடியாது. தவிர, தாங்கள் ஏமாந்து போன விபரத்தை 'இமேஜ்" கருதி வெளியே சொல்வதில்லை.
ஒற்றுமை இல்லை
தினம் ஒரு கடை முளைப்பதால், கடைக்காரர்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கடைக்காரர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. இதனை பயன்படுத்திக்கொள்ளும் மோசக்கார கும்பல் புகுந்து விளையாடி வருகிறது. கோவை நகரம் மட்டுமல்லாமல், புறநகர்ப் பகுதிகளிலும் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறது இக்கும்பல்.