ஆயுதமேந்தித் தாக்குவோம் என்ற ராம்தேவ் பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம்
டெல்லி: அடுத்த முறை நாங்கள் போராட்டம் நடத்தினால், ஆயுதமேந்துவோம். எங்களைத் தாக்குவோரைத் திருப்பித் தாக்குவோம். இதற்காக 11,000 பேர் கொண்ட படையை உருவாக்குவோம் என்று கூறியுள்ள பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனது ஹரித்வார் ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் அடுத்த முறை போராடும்போது வெறும் கையுடன் வர மாட்டோம். 11,000 ஆண், பெண்களைக் கொண்ட படையை உருவாக்குவோம்.
அடுத்து ராம்லீலா மைதானத்தில் ராவண லீலாதான் நடைபெறும். எங்களை யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் 20 ஆண்களையும், 20 பெண்களையும் தேர்வு செய்து அவர்களை ஊழலுக்கு எதிரான போர்ப்படையாக உருவாக்குவோம். இவர்கள் 35 முதல் 40 வயது கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அவர்களை படை போல தயாரிப்போம். இது ஒரு ராணுவம் போல செயல்படும் என்றார் ராம்தேவ்.
இந்தப் பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ராம்தேவின் இந்தப் பேச்சை உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இது தேச விரோத பேச்சாகும். இதுகுறித்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார் அவர்.
ராம்தேவ், அன்னாவுக்கு காங். கண்டனம்
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் ராம்தேவ் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆயுதமேந்திப் போராடுவோம் என்று ராம்தேவ் கூறுகிறார். அவரை ஆதரிக்கும் பாஜக, இதை ஆதரிக்கிறதா என்பதை விளக்க வேண்டும். அதேபோல 2ம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார். இதுவும் கண்டனத்துக்குரியது. தற்போது மத்தியில் நடந்து வருவது சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு. இந்த அரசுக்கு எதிராக 2ம் சுதந்திரப் போரில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications