பாஜகவிலிருந்து கோபிநாத் முண்டே விலக முடிவு-காங்கிரஸில் சேருகிறார்
இது தொடர்பாக மத்திய அமைச்சரும் முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்குடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆனால், அவரை பாஜகவிலிருந்து விலகிவிடாமல் தடுக்க சிவசேனை செயல் தலைவர் உத்தவ் தாக்கரே தீவிரமாக முயன்று வருகிறார்.
தனது சகோதரரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜனின் சகோதரியின் கணவர் தான் கோபிநாத் முண்டே. மகாஜன் உயிரோடு இருந்தபோது முண்டேவுக்கு பாஜகவில் பெரும் மரியாதை இருந்தது.
ஆனால், அவரது மறைவுக்குப் பின் முண்டே ஒதுக்கப்பட்டு வந்தார். குறிப்பாக கட்காரி பாஜக தலைவரான பின் முண்டேவுக்கு முக்கியத்துவம் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டது.
சமீபத்தில் புனே மாவட்ட பாஜக தலைவர் பதவிக்கு முண்டே பரிந்துரைந்தவரின் பெயரை நிராகரித்த கட்காரி, தனது ஆதரவாளரை அந்தப் பதவிக்கு நியமித்துவிட்டார்.
இதனால் வெறுப்படைந்துள்ள முண்டே பாஜக கூட்டங்களை புறக்கணித்து வருகிறார். இந் நிலையில் பாஜகவை விட்டே வெளியேற அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான விலாஸ் ராவ் தேஷ்முக்கை கோபிநாத் முண்டே சந்தித்துப் பேசினார்.
முண்டே கட்சியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க பாஜக பெரிய அளவில் முயற்சி மேற்கொள்ளவில்லை. ஆனால், கூட்டணிக் கட்சியான சிவசேனா அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக முண்டேவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேச்சு நடத்தி வருகிறார்.
மாநிலத்தில் சிவசேனா-பாஜக இடையிலான உறவு வலுவாக இருப்பதில் கோபிநாத் முண்டே முக்கிய பங்கு வகித்து வருவதால் அவருடன் சேனா பேச்சு நடத்தி வருவதாகத் தெரிகிறது.
மேலும் பாஜகவிலிருந்து வெளியேறினால், இப்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசை வீழ்த்துவது கடினமாகிவிடும் என்றும் சிவசேனா கருதுகிறது.
பிற்படுத்தப்பட்ட தலைவரான உமா பாரதி மீண்டும் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பிறகு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான முண்டேவுக்கு தர வேண்டிய மரியாதையை அந்தக் கட்சி குறைத்துக் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.