சாத்தூர் அருகே ரயிலை கவிழ்க்க சதி: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சாத்தூர்: கன்னியாகுமரி-ராமேஸ்வரம் ரயில் சாத்தூர் அருகே சென்ற போது தண்டவாளத்தில் இரும்புத் துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி-ராமேஸ்வரம் ரயில் நள்ளிரவு 2 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நல்லி இடையே சிற்றாறு பாலத்தை கடந்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டது. இதனால் எஞ்சின் டிரைவர் உடனே ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்தினார்.
ரயிலில் இருந்து அவர் கீழே இறங்கி பார்த்த போது, ரயிலை கவிழ்க்க விஷமிகள் சிலர் தண்டவாளத்தில் இரும்பு துண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனால் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து தண்டவாள விரிசல்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் அந்த வழியாக வந்த 4 ரயில்களும் 5 மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றன. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்திற்கு காரணம் யார் என்று ரயில்வே போலீசாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.