கூடுதல் கட்டண வசூல்: 2 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்-அங்கீகார ரத்து எச்சரிக்கை
சென்னை: சென்னையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
நீதிபதி கே.ரவிராஜபாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை வேப்பேரி செவன்த் டே அட்வெந்து சபை மெட்ரிக் பள்ளியிலும், ஆழ்வார்திருநகர் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியிலும் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜனை நேற்று நேரில் சந்தித்து புகார் கொடுத்தனர்.
இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த இரண்டு பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது,
அரது நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக தங்கள் பள்ளி மீது புகார் வந்துள்ளது. இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். அதிகக் கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண சட்டப்பிரிவு 7 (1)-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மெட்ரிக் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் தொகுப்பு 11-பி-ன்படி பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர அந்த 2 பள்ளிகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்துமாறு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளருக்கு (ஐ.எம்.எஸ்.) இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் உத்தரவின்பேரில் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் இன்று அந்த 2 பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தவிருக்கிறார்.
ஆய்வாளர் சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் கிடைத்தால் முதலில் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விசாரணை நடத்தப்படும். புகார் உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று இயக்குனர் தேவராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.