சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம், உரம் தயாரிக்க மாநகராட்சிக்கு அனுமதி
சென்னை: சென்னை மாநகராட்சியின் குப்பைகளை தரம் பிரித்து, மின்சாரம், உரம், செங்கல் ஆகியவற்றை தயாரிக்கும் திட்டத்திற்கு, பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை நகரில் சேகரமாகும் டன் கணக்கான குப்பைகள், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடக்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவை மங்கும் குப்பை, மங்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சியில் ஈடுபட மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்கான டென்டர் விடப்பட்டு, ஹைட்ரோ ஏர் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், குப்பைகளில் இருந்து, மின்சாரம், செங்கல், உரம் ஆகியை தயாரிப்பதற்கு அப்பகுதியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இதை எதிர்த்து, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், குப்பை மறுசுழற்சி செய்யும் தி்ட்டம் பாதியில் நின்றது. பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை மாநகராட்சியின் தரப்பில் ஆஜராகும், மோகன் ராம் பராசுரன் கூறுகையில், தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளில் இருந்து, பொருட்கள் தயாரிப்பதற்கு, பசுமைத் தீர்பாயம் எந்த தடையும் விதிக்கவில்லை.
குப்பைகளில் இருந்து பொருட்கள் தயாரிப்பதால், சுகாதார கேடு ஏற்படாது என்பதை மாநகராட்சி ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், இத்திட்டத்தை செயல்படுத்தலாம். தீர்ப்பாயத்தின் இறுதி முடிவு வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது, என்றார்.
பசுமைத் தீர்ப்பாயத்திற்கு தடையில்லை என்பது உறுதியாகி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி விரைவில், பெருங்குடி குப்பை கிடங்கில் மறுசுழற்சி பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.