ஜன் லோக்பால் மசோதா போராட்டத்தில் எனது உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன்- அன்னா

இன்று காலை அன்னா ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். வழக்கமான உற்சாகத்தில் பாதி அளவு குறைந்தபோதிலும் அவரது பேச்சில் உணர்ச்சி குறையவில்லை.
அவர் பேசுகையில், ஊழலை எதிர்த்துப் போராடி ஒழிப்பதில் அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, அவர்கள் சீரியஸாக இல்லை.
ஊழலை ஒழிப்பதில் அரசின் முயற்சிகள் போதுமானதாக இல்லை. தீவிரமாக அவர்கள் செயல்பட மறுக்கிறார்கள்.
லோக்பால் வரம்புக்குள் கீழ் நிலை அரசு அதிகாரிகளையும் சேர்க்க அரசு தயங்குகிறது. ஆனால் இவர்களில் பலர் செய்யும் ஊழல்களால் கிராமங்களில் வசிக்கும் அப்பாவி ஏழை மக்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அரசு வசதியாக மறந்திருக்கிறது.
எனது உடல் நிலையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உண்ணாவிரதத்தால் எனது உடலில் 6 கிலோ எடைதான் குறைந்துள்ளது. ஆனால் மன வலிமை மிகுந்திருக்கிறது. உங்களால் கிடைத்த மன பலம் மேலும் அதிகரித்துள்ளது. நீங்கள்தான் எனது ஆதரவு, பலம். உங்களது ஆதரவு இருக்கும் வரை நான் உயிரைக் கூட பொருட்படுத்தப் போவதில்லை. உயிர் போனாலும் பரவாயில்லை, ஊழல் ஒழிய வேண்டும்.
மூன்று பிரச்சினைகளில் அரசுக்கும், ஜன் லோக்பால் மசோதா குழுவினருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. அவற்றையும் அரசு ஏற்க வேண்டும். அதுவரைஎனது போராட்டம் தொடரும். இதில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இதற்காக எனது உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார் ஹஸாரே.
3 அம்சங்கள் குறித்து இழுபறி!:
மத்திய அரசிடம் பேசி வரும் அன்னா ஹஸாரே குழுவினர் புதிய லோக்பால் வரைவு மசோதா நகலைக் கொடுத்துள்ளனர். அதில் கீழ் நிலை அரசு அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
அன்னா ஹஸாரேவின் உடல் நிலை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து பிரச்சினையை முடிக்க மத்திய அரசுத் தரப்பும், அன்னா குழுவினரும் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்தது. அப்போது அரசிடம், புதிய வரைவு மசோதாவை அன்னா தரப்பு வழங்கியது.
தற்போது மொத்தம் 3 அம்சங்கள் குறித்துதான் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. மற்றவற்றை கிட்டத்தட்ட பேசி முடித்துவிட்டனர். இந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய மசோதா நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின்போது நல்லமுன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அன்னா குழு சார்பில் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசுத் தரப்பில் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்றார். அவருடன் கிழக்கு டெல்லி எம்.பி. சந்தீப் தீக்ஷித், முதல்வர் ஷீலா தீட்சித்தின் நெருங்கிய உதவியாளரான பவன் கேரா ஆகியோரும் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் குர்ஷித் கூறுகையில், இது நல்ல சந்திப்பாக அமைந்தது. இருப்பினும் எதுவும் இறுதிப்படுத்தப்படவில்லை. உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம். மேலும் விவாதங்கள் நடைபெறும் என்றார்.
விரைவில் பிரணாப் தலைமையிலான அதிகாரப்பூர்வ அரசுக் குழுவினருடன் அன்னா குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
கிரண் பேடி கூறுகையில், கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், லோக்பால் மூலமாக மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைப்பது உள்ளிட்ட 3 அம்சங்கள் குறித்து தற்போது சிக்கல் நீடிக்கிறது. இதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து பேசுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications