பெயர் குழப்பம்: பெரிய வெங்காயத்திற்கு விதித்த தடையால் சின்ன வெங்காயத்திற்கு பாதிப்பு!
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குண்டடம், மூலனூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசதூர், ஒட்டன் சத்திரம் பகுதிகளில் தான் சின்ன வெங்காயம் பயிரிடப்டுகிறது. வட இந்தியாவில் பெரிய வெங்காயம் தான் பயிரிடுகின்றனர்.
அன்மையில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த தடை இன்னும் அமலில் உள்ளது. மத்திய அரசோ பெரிய வெங்காயத்திற்கு தான் தடை விதித்தது. ஆனால் ஆங்கிலத்தில் பெரிய, சின்ன வெங்காயத்திற்கு ஆனியன் என்ற ஒரே பெயர் தான்.
இதனால் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்யப்போனால் அதிகாரிகள் ஆனியன் ஏற்றுமதிக்கு தடை உள்ளது என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இந்த பெயர் குழப்பத்தால் தமிழக வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதுவும் இந்த ஆண்டு சின்ன வெங்காய விளைச்சல் அமோகமாக உள்ளது. அறுவடைக்குத் தயாராக இருக்கும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
""இப்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் நேரமாக இருப்பதால் வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகள் அந்த வெங்காயத்தை நனைய விடாமல் பாதுகாக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
மழையில் வெங்காயம் சிறிதளவு நனைந்து விட்டாலும் கூட அழுகிப்போய்விடும் அபாயம் உள்ளது.
சின்ன வெங்காயத்துக்கும் பெரிய வெங்காயத்துக்கும் உள்ள வித்தியாசத்தை முதல்வர் மத்திய அரசுக்கு விளக்கி, மொத்தமாக “ஆனியனுக்கு" போடப்பட்டுள்ள தடையிலிருந்து சின்ன வெங்காயத்துக்கு “விலக்கு" வாங்கித் தரவேண்டும்.
இப்போது துறைமுகங்களில் தேங்கியுள்ள “பத்து லட்சம் டன்" வெங்காயம் கெட்டுப்போகும் முன், தமிழக முதல்வர், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சருடன் பேசி ஏற்றுமதிக்கு அனுமதி வாங்கிக்கொடுக்க வேண்டும்"" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.