செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டி வேட்பாளர்களால் கட்சி வேட்பாளர்கள் தவிப்பு
செங்கோட்டை: செங்கோட்டை நகர்மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் பலமுடன் களமிறங்கி உள்ளதால் முக்கியக் கட்சிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டை நகராட்சியில் காங்கிரஸ், தி.மு.க.விற்கு செல்வாக்கு அதிகம். இந்நகராட்சியில் இதுவரை காங்கிரஸ் சார்பில் முத்துசாமி கரையாளரும், த.மா.கா. சார்பில் ராஜசரஸ்வதியும், தி.மு.க. சார்பில் ரஹீமும் சேர்மனாக பதவி வகித்துள்ளனர். அ.தி.மு.க. ஒருமுறை கூட சேர்மன் பதவி வகிக்கவில்லை.
இந்நிலையில் இந்த முறை நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட நகர செயலாளர் தங்கவேலு, நகர ஜெ.பேரவை செயலாளர் வெங்கடேசன், மூத்த கட்சிகாரர் ஞானராஜ், பாரத் மாண்டிசோரி பள்ளி தாளாளர் மோகன கிருஷ்ணன், கணேசன் ஆகியோர் விருப்ப மனு செய்தனர். இதில் தங்கவேல், வெங்கடேசன், ஞானராஜ் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் மோகன கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது கட்சிக்காரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் பல பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிர்ப்பு எழுந்ததை போல் செங்கோட்டை வேட்பாளர் மோகன கிருஷ்ணனுக்கு எதிராக பல அ.தி.மு.க.வினர் கட்சி தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.
அதில் கடந்த சில ஆண்டுகளாக கட்சி பணிகளில் கலந்து கொள்ளாமல் சொந்த தொழில் வளர்ச்சிக்கு அப்போதைய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட மோகன கிருஷ்ணனை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். ஆனால் வேட்பாளர் மாற்றம் நிகழாத நிலையில் கடந்த திங்கட்கிழமை மோகன கிருஷ்ணன் அ.தி்.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நகர ஜெ.பேரவை செயலாளரும் கடந்த நகர்மன்றத்தில் 18வது வார்டு கவுன்சிலருமான வக்கீல் வெங்கடேசன் நேற்று சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வக்கீல் வெங்கடேசன் அ.தி.மு.க.வில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் வகித்தவர்.
செங்கோட்டை ரயில் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று கட்சிகாரர்களிடையே மட்டுமின்றி பொதுமக்களிடமும் மதிப்பு மிகுந்தவர். இதனால் அ.தி.மு.க.விற்கு எதிராக அவர் களத்தில் குதித்திருப்பது அ.தி.மு.க.வினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. போட்டி வேட்பாளர் வெங்கடேசனிடம் கேட்டபோது, செங்கோட்டை மக்கள் நலன் கருதியும், இப்பகுதி மேம்பாடு கருதியும் போட்டியிடுவதாக தெரிவித்தார். அ.தி.மு.க.வை போல தி.மு.க.விலும் போட்டி வேட்பாளர் ஷேக் அப்துல் காதர் என்பவர் களமிறங்கியுள்ளார்.
தி.மு.க. சார்பில் தற்போதைய சேர்மனும், நகர செயலாளருமான ரஹீமுக்கு எதிராக அவர் வேட்புமனு தாககல் செய்துள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் 23 வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் பின்னர் தி.மு.க.வில் சேர்ந்தார். நகராட்சி நியமன குழு உறுப்பினராகவும், செயல்பட்ட இவர் களமிறங்கி உள்ளது தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக நிர்வாகிகள் களமிறங்கி இருப்பது செங்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.












Click it and Unblock the Notifications