திருச்சி சிறையில் பயங்கர மோதல்-போலீஸ் தடியடியில் 20 கைதிகள் காயம்
திருச்சி : திருச்சி மத்திய சிறையில் இன்று கைதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. போலீஸார் நடத்திய தடியடியில் 20 கைதிகள் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
திருச்சி சிறையில் கடந்த 2 நாட்களாக பிளாக் எண் 6ல் அடைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட கைதிகள் சாப்பாடு சரியில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை ஏழரை மணியளவில் அவர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டபோது மிகவும் மோசமாக உள்ளதாக சிறை அதிகாரிகளிடம் அவர்கள் மீண்டும் புகார் கூறினர்.
இந்த நிலையில் ஜெயிலர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் போலீஸார் திடீரென அந்த கைதிகளின் அறைகளுக்கு வந்து அதிரடி சோதனையில் இறங்கியதாக கூறப்பட்டது.
இதைக் கண்டு அதிருப்தி அடைந்த கைதிகள், நாங்கள் சாப்பாடு சரியாக இல்லை என்று கூறி வருவதால் வேண்டுமென்றே ரெய்டு நடத்தி பொய் வழக்குப் போட முனைகிறீர்களா என்று கேட்டுள்ளனர்.
இதையடுத்து கைதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது போலீஸார் தாக்கியதில் ஒரு கைதி படுகாயமடைந்து விழுந்தார். இதைப் பார்த்த மற்ற கைதிகள் போலீஸாருடன் மோதலில் குதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீஸாரும், சிறைக் காவலர்களும் தடியடி நடத்தினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் சிறைக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் 30 கைதிகள் சிறை வளாகத்திற்குள் உள்ள மரத்தில் ஏறிக் கொண்டு போராட்டத்தில் குதித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிறைத்துறை டிஐஜி துரைசாமி, கண்காணிப்பாளர் சுந்தரராஜன் விரைந்துள்ளனர். அவர்கள் கைதிகளுடன் பேசி வருகின்றனர். கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அவை நிறைவேறும் வரை மரத்திலிருந்து இறங்கப் போவதில்லை என்று அந்த கைதிகள் கூறியுள்ளனர்.
சிறைக்குள் ஏற்பட்ட இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள் சிறையைச் சுற்றிலும் குழுமியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.