ப.சிதம்பரத்தை விசாரிக்க கோரும் சு.சாமியின் வழக்கு-தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா உட்பட
17 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல கலைஞர் டி.விக்கு ரூ. 210 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களான திமுக எம்பி கனிமொழி மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
நீதிபதிகள் சிங்வி, கங்கூலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இன்று இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்திய ஆக வேண்டும் என சாமி வாதிட்டார்.
அதே போல ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், இதை சிபிஐ எதிர்த்தது. சிபிஐயின் விசாரணையை மேற்பார்வையிடுவது, அதன் நம்பகத்தன்மையை பாதிக்கும் என சிபிஐ வழக்கறிஞர் வாதாடினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதன் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் Centre for Public Interest Litigation என்ற அமைப்பின் சார்பில் அன்னா ஹசாரேவின் குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும் தன்னை இணைத்துக் கொண்டு சாமிக்கு ஆதரவாக வாதாடியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications