புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
ஓட்டப்பிடாரம்: நெல்லை மாவட்டம் புதியம்புத்தூரில் வாக்களிக்க பணம் கொடுத்தவரை கைது செய்யாமல் வாங்கியவரை மட்டும் கைது செய்த போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஓட்டப்பிடாரம் யூனியனில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இந்த யூனியனுக்கு உட்பட்ட புதியம்புத்தூர் வண்டிமலச்சியம்மன் கோவில் தெருவில் வாக்காளர்களுக்கு ஓட்டுபோட அதிமுகவினர் பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.
ஓட்டப்பிடாரம் தேர்தல் பறக்கும் படை.யினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஆனந்தப்பன் என்பவரிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மாரியப்பன் என்பவர் மாதிரி ஓட்டு சீட்டுடன் ரூ.400 கொடுத்ததாக பறக்கும்படை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஆனந்தப்பனை கைது செய்தனர்.
தகவல் அறிந்ததும் மா.கம்யூ மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட 10வது வார்டில் போட்டி.யிடும் அக்கட்சியின் வேட்பாளர் பெருமாள், ஓட்டப்பிடாரம் ஓன்றிய செயலாளர் செந்தூர்மணி, புதியம்புத்தூர் நகர செயலாளர் லிங்கராஜ் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பணம் கொடுத்தவரை கைது செய்யாமல் வாங்கியவரை எப்படி கைது செய்யலாம் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். மாரியப்பனையும் கைது செய்வோம் என தெரிவித்தனர். இருப்பினும் அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவிக்கவே போலீசார் வேறு வழியில்லாமல் மாரியப்பனையும் கைது செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications