காலைக் கட்டி விட்டு பந்தயத்தில் ஓட விட்டால் எப்படி ஜெயிப்பார் நேரு?- கருணாநிதி
நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: சொத்துக் குவிப்பு வழக்கில் நீண்ட நாட்களாக வாய்தா வாங்கிக் கொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இன்று பெங்களூர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இறுதியாக நீதிக்கு தலை வணங்கியிருக்கிறார்கள்.
கேள்வி: வழக்கிலே ஆஜராகாமல் நூற்றுக்கு மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தாரே, நேற்றைய தினம் கூட உச்ச நீதிமன்றத்திற்கு சென்று நீதிமன்றத்திலே ஆஜராகாமல் இருப்பதற்கான முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டாரே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க வேண்டும் என்பது தான் காரணம். தற்போது நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. எனவே இன்று ஆஜராகியிருக்கிறார்.
கேள்வி: குற்றவாளி என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பதை வைத்து, அவர் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென்று நீங்கள் கோருவீர்களா?
பதில்: நான் கேட்கவில்லை. எதற்கெடுத்தாலும் ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு அறிக்கையிலும் ஜெயலலிதா பயன்படுத்துவதுதான் அந்த வார்த்தை. நான் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை.
கேள்வி: கூடங்குளம் பிரச்சனையில் மத்திய அரசு கூட்டணியிலே இடம் பெற்றுள்ள நீங்கள் விலக வேண்டுமென்று கேட்டிருக்கிறார்களே?
பதில்: திமுக மத்திய அரசிலே இடம் பெற்றிருக்கிறது. மத்திய அரசிலே மாநில கட்சிகளில் ஒன்று இடம் பெற்றிருந்தால், அதை விரும்பாதவர்கள் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே மத்திய அரசிலிருந்து அக்கட்சி விலக வேண்டுமென்று தான் கேட்பார்கள்.
கேள்வி: கூடங்குளம் பிரச்சனைக்காக போராடுகின்ற மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அங்கேயுள்ள மக்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாக்க வேண்டும். அப்துல்கலாம் கூட ஆய்வு செய்வதாக சொல்லியிருக்கிறார். மக்களின் நன்மைக்காக மத்திய, மாநில அரசுகள் உதவிட முயற்சிக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடமில்லை.
கேள்வி: திருச்சியிலே நடைபெற்ற இடைத்தேர்தல் நேர்மையாக நடந்திருப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்: கே.என்.நேரு அதே தொகுதியில் கடந்த முறை 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தார். தற்போது காலை கட்டிப் போட்டு விட்டு ஓட்டப் பந்தயத்தில் ஓட விடுவதைப் போல, நேருவை சிறையிலே போட்டு விட்டு இடைத்தேர்தலை நடத்தியவர்களின் வீரத்தைப் பாராட்டித் தான் ஆக வேண்டும். அந்த நிலையிலே கூட தற்போதுள்ள வாக்கு வித்தியாசத்தைப் பார்க்கும்போது, திமுகவுக்கு சாதகமாகத்தான் உள்ளது.