அடப் பாவமே, ஒரு வாக்காளரைக் கூட கவர முடியாத வேட்பாளர்!
ஊட்டி: ஊட்டி நகராட்சியின் 18வது வார்டில் போட்டியிட்ட அற்புத சகாயராஜ் என்ற வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. இதனால் மக்கள் மத்தியில் பரிதாபப் பார்வைக்குள்ளாகியுள்ளார் சகாய ராஜ்.
சகாயராஜ் மதிமுகவைச் சேர்ந்தவர். ஊட்டி நகராட்சியின் 18வது வார்டில் போட்டியிட்டார். ஆனால் இவர் வேறு வார்டைச் சேர்ந்தவர். வார்டு மாறி வந்து போட்டியிட்டார்.
இந்த நிலையில் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டபோது சகாயராஜுக்கு ஒரு ஓட்டுக் கூட பதிவாகவில்லை. இதனால் வாக்கு எண்ணும் இடத்தில் இருந்த அவர் பெரும் அதிர்ச்சி அடைந்து பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
இவர் வேறு வார்டைச் சேர்ந்தவர் என்பதால் இவரது ஓட்டைக் கூட இவரால் போட முடியாமல் போய் விட்டது. இவர் ஓட்டுப் போட்டிருந்தால் ஒரு ஓட்டாவது கிடைத்த பெருமையைத் தக்க வைத்திருக்கலாம். இப்போது 'டக் அவுட்'ஆகி மக்களிடம் பரிதாபத்துக்குரியவராகியிருக்கிறார் சகாயராஜ்.
மனம் தளராமல், அடுத்த தேர்தலிலாவது ஏதாவது 'அற்புதம்' நடக்கிறதா என்று பாருங்கள் அற்புத சகாயராஜ்.