உள்ளாட்சித் தேர்தல்- வாக்குகளை அள்ளியதில் 3வது இடத்தில் தேமுதிக-4வது இடம் காங்கிரஸுக்கு

கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டு கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டவை இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. மதிமுகவும் தனியாகவே போட்டியிட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்குத்தான் அதிக அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளன. அக்கட்சி 39.02 சதவீத வாக்குகளை அள்ளியுள்ளது. நகர்ப் புறத்தில் 39.24 சதவீத வாக்குகளையும், கிராமப்புறங்களில் 38.69 சதவீத வாக்குகளையும் அக்கட்சி பெற்றுள்ளது.
2வது இடத்தைப் பிடித்துள்ள திமுகவுக்கு 26.09 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இக்கட்சிக்கு நகர்ப்புறங்களில் 26.67 சதவீத வாக்குகளும், கிராமப்புறங்களஇல் 25.71 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன.
தேமுதிகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் வாக்கு வங்கி கிட்டத்தட்ட நிலையாக உள்ளது. கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட்ட அக்கட்சிக்கு 8.38 சதவீத வாக்குகள் கிடைத்தன. லோக்சபா தேர்தலில் 10.01சதவீத வாக்குகளை அது பெற்றது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 இடங்களைப் பெற்றது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சிக்கு 10.11 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த லோக்சபா தேர்தலை விட லேசான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது தேமுதிக.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியிடம் இதுவரை இருந்து வந்த 3வது இடத்தை தற்போது தேமுதிக பிடித்துள்ளது. மூன்றாவது பெரிய கட்சியாகவும் அது நிலை பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த காலங்களில் அதிமுகவை பதம் பார்த்து வந்த இந்தக் கட்சி, இந்த முறை அதிமுகவுக்கு எந்த பாதகத்தையும் ஏற்படுத்த முடியாமல் போய் விட்டது வியப்புதான்.
காங்கிரஸ் கட்சியின் நிலை கேவலமாகியுள்ளது. அக்கட்சிக்கு 5.71 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. பாமக 3.55 சதவீதம், பாஜக 1.35, மதிமுக 1.7, சிபிஎம் 1.02, சிபிஐ 0.71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. சுயேச்சைகள் மொத்தமாக 9.46 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
வாக்கு சதவீத விவரத்தை வைத்து அடுத்த லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம், எப்படியெல்லாம் பேரம் பேசலாம் என்ற கணக்கில் இப்போதே இந்தக் கட்சிகள் இறங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications