தங்கம் விலை ஒரே நாளில் ரூ.736 அதிகரிப்பு!: பிரச்சனை ஐரோப்பாவில்.. பாக்கெட் கிழிந்தது தி.நகரில்!
ஐரோப்பாவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்களால் யூரோ கரன்சி மற்றும் டாலரின் மதிப்பு சரிந்து வருகிறது. இந் நிலையில் கிரீஸ், ஸ்பெயின், போர்சுகல் உள்ளிட்ட கடனில் தத்தளிக்கும் நாடுகளுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளது.
இதனால், யூரோ மற்றும் டாலரின் மதிப்பில் மேலும் மாறுதல்கள் ஏற்படும் என்பதால், பணத்தை பத்திரமான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய ஐரோப்பிய நாடுகளில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்கத்தின் விலை ஒரே நாளில் நேற்று பவுனுக்கு ரூ. 736 அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.92 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.2608க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு பவுன் விலை ரூ. 20,864.
இந்த விலை அடுத்த சில நாட்களில் ரூ. 21,000த்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளியையொட்டி விலை உயர்ந்துள்ளதாகக் கருதப்பட்டாலும், உண்மையான காரணம் ஐரோப்பிய நாடுகளின் நிதிப் பிரச்சனை தான்.