தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்'
சென்னை: தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்' வழங்கப்படவுள்ளது.
முதல்கட்டமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவர்களுக்கு இது வழங்கப்படும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 2,777 அரசு உயர்நிலை பள்ளிகள், 3,432 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 60 லட்சம் மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவ, மாணவிகளின் பெயர்கள், ரத்த குரூப், விலாசம், வயது, பெற்றோர் குறித்த விபரங்கள், குடும்ப வருமானம், மதிப்பெண் விபரம், தனிப்பட்ட விவரங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் தனித்தனியே பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவரங்களை எல்லாம் உள்ளடக்கி ஒரே அட்டையில் மாணவ, மாணவிகள் குறித்த முழுவிபரம் அடங்கிய 'ஸ்மார்ட் கார்ட்' திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக குஜராத் மாநிலத்தில் அமலாக்கப்பட்டுள்ளது.
இதை தமிழக அரசும் அமலாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு குஜராத் சென்று, இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு வந்துள்ளது.
இத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே குறியீட்டு எண்ணும் வழங்கப்படும். வகுப்பறைகளில் அட்டண்டென்ஸ் இந்த அட்டை மூலமே பதிவு செய்யப்படும். இதை ஸ்வைப்பிங் கார்டாக பயன்படுத்தி, வருகையை மாணவ, மாணவிகள் பதிவு செய்யலாம்.
இதன் மூலம் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவிகளின் விபரங்களையும் எளிதில் கண்டறிந்து கொள்ளலாம்.