ஜன்லோக்பால் மசோதா வராவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்-அன்னா மிரட்டல்
டெல்லி: ஜன் லோக்பால் மசோதாவை வருகிற குளிர்காலக்கூட்டத் தொடருக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கூட்டத் தொடரின் கடைசி நாளின்போது எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் என்று அன்னா தெரிவித்துள்ளார்.
மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அன்னா அறிவித்துள்ளது மறுபடியும் ஒரு பரபரப்பான போராட்டக் களத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அன்னா மெளன விரதம் இருந்து வருகிறார். இந்த மெளனத்தை இன்னும் ஓரிரு நாட்களில் கலைத்து விட்டு மக்களை சந்தித்து நேரடியாகப் பேசப் போவதாக நேற்றுதான் தனது பிளாக் மூலம் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.