நெல்லை பல்கலையில் ரூ. 1000 கோடி முறைகேடு: நிதி, தேர்வுத் துறைகளில் தணிக்கை குழு ஆய்வு
நெல்லை: நெல்லை பல்கலைக்கழகத்தில் நிதி மற்றும் தேர்வுத் துறைகளில் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
நெல்லை பல்கலைக்கழகத்தில் பிஎட் மாணவர் சேர்க்கை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அரசு உத்தரவின் பேரில் ஆய்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை அழிக்க முயற்சி மேற்கொள்ளபடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் சென்னையில் உள்ள ஆடிட்டர்ஸ ஜெனரல் அலுவலகத்தில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் 5 நாட்கள் முகாமிட்டு துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பல்கலைக்கழக அலுவலர்கள் சரியான ஒத்துழைப்பு அளிக்காததால் தணிக்கை குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.
தற்போது 2வது கட்டமாக ஆய்வு செய்ய முடிவு செய்து நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சீனியர் ஆடிட்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு வந்துள்ளது.
2வது நாளான நேற்று பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு துறைகளில் ஆய்வு நடந்தது. வங்கிக்கணக்கு, பணபரிவர்த்தனை, தேர்வுகட்டண பதிவேடு, விடைத்தாள் திருத்தும் பிரிவில் உள்ள நடைமுறை குறித்து ஆய்வு செய்தனர். இந்த முறையும் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் அலுவலர்கள் ஒத்துழைப்பு சுமாராகத் தான் உள்ளது என்று கூறப்படுகிறது.