6 பள்ளி மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் கைது
விருதுநகர்: 3ம் வகுப்பு மாணவி உட்பட 6 மாணவிகளுக்கு தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி(55). வன்னியம்பட்டி பழைய செந்நெல்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான ராமராஜ்- பழனியம்மாள் ஆகியோரின் மகள் தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக ராமசாமி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதனை பார்த்த உடன் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவர் ராமசாமியை எச்சரித்துள்ளார்.
இது குறித்து சிறுமியும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராமசாமியை கண்டித்துள்ளனர். மேலும் பஞ்சாயத்து பேசி முடிக்கப்பட்டது. ஆனால் ராமசாமி அந்த சிறுமியை மட்டுமின்றி பள்ளியில் படித்து வந்த மற்ற 5 சிறுமிகளுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த விஷயம் பற்றி தெரிய வந்த பெற்றோர் மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர். இது குறித்து பெற்றோர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜிடம் தெரிவித்துள்ளனர். அவர் கல்வி அலுவலர்களுக்கு தகவல் அளித்தார்.
இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் சரக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கே.ஜெயராஜ் கந்தசாமி பள்ளிக்கு சென்று விசாரித்தார். அதன் பிறகு ராமசாமியை வன்னியம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் ராமராஜ் கொடுத்த புகாரின் போரில் வழக்குப் பதிவு செய்து தலைமை ஆசிரியர் ராமசாமியை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ராமசாமியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தற்காலிக பணி நீக்கம்:
ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை பெற்றுக் கொண்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாராம் தலைமை ஆசிரியர் ராமசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.