அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும்- ரமணன்
வடகிழக்குப் பருவமைழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. காலையில் சில மணி நேரம் ஓய்ந்திருந்த மழை காலை 9 மணி முதல் மீண்டும் தொடங்கியது. தொடர் மழைகாரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்பவர்கள் மிகவும் சிரமத்திக்குள்ளாகினர்.
போக்குவரத்து பாதிப்பு
மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. கீழ்ப்பாக்கம், கிண்டி, வடபழனி ஆகிய இடங்களில் காலை முதல் பெய்து வரும் கனமழையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொற்றுநோய் அபாயம்
மழை காரணமாக வடசென்னைபகுதி முற்றிலும் ஸ்தம்பித்தது. வியாசர்பாடி, வியாசர்புரம், கணேசாபுரம் பகுதிகளில் வெள்ளநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
மழை தொடரும்
இந்த மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அப்படியே நீடிக்கிறது. இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தி்ல் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரவாக்குறிச்சியில் 13 செமீ மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீ்னம்பாக்கத்தில் தலா 5 செமீ மழை பெய்துள்ளது என்றார்.