செல்போனில் பாட்டு ஆயுள் கைதிக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்- புழலுக்கு மாற்றம்
கோவை: கோவை மத்திய சிறையில் ஜாலியாக ஹெட்போன் மாட்டிக் கொண்டு செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஆயுள் தண்டனைக் கைதியை அதிகாரிகள் செல்லும், காதுமாக பிடித்தனர். பின்னர் அவரை புழல் சிறைக்கு இடமாற்றம் செய்தனர்.
சேலம், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் நபர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தினந்தோறும் இவர்களை காண வரும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சிறைக்குள் கொண்டுவருவதற்கு முன்பாக சிறைக்கு வெளியில் இருக்கும் கோவை மாநகர போலீசாரின் மூலமும் தீவிர சோதனை செய்யப்படுகிறது. பின்னர் சிறைத்துறையின் அதிகாரிகள் மூலமும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே கைதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த இரண்டு கட்ட சோதனைகளையும் தாண்டி சில கில்லாடிகள் தாங்கள் கொண்டுவரும் செல்போனையும், சிம்கார்டுகளையும் சிறைக்குள் இருக்கும் சிறைவாசிகளுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
29 செல்போன்கள் பறிமுதல்
கடந்த மாதம், கோவை சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கைதிகள் வைத்திருந்த 29 செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மாதமும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது 31ம் அறையில் இருந்த ஆனந்தகுமார் என்ற ஆயுள் தண்டனை கைதி கையில் செல்போனை பிடித்தபடி, காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு சினிமாப் பாடலைக் கேட்டு லயித்திருந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகளை அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்ததுடன், அவரின் அறையிலிருந்து மூன்று சிம கார்டுகள், இரண்டு பேட்டரிகள், ஒரு மெமரி கார்டு, மற்றும் ஒரு ஹெட்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மிகவும் நவீனமான அந்த செல்போனை சிறைக்குள் பயன்படுத்திய குற்றத்திற்காக கோவை மத்திய சிறையில் இருந்து ஆனந்தகுமாரை சென்னை புழலில் உள்ள மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்துள்ளனர் சிறை அதிகாரிகள்.
அங்கு போய் சிடி போட்டு படம் பார்க்காமல் இருந்தால் சரி..!