முல்லை பெரியாறு அணை பற்றி கேரளா பொய்ப்பிரச்சாரம் - பொறியாளர் சங்கம் விளக்கம்
நெல்லை: முல்லை பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டதால் எந்த ஆபத்தும் இல்லை. அணை உடைந்து விடும் என்று கேரள அரசு வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தின் பவள விழா நெல்லையில் நடந்தது. நெல்லை கிளை தலைவர் பாஸ்கல்ராஜ் தலைமை வகித்தார். இணை செயலாளர் பழனிவேல் வரவேற்றார். விழாவில் முல்லை பெரியாறின் நிலை என்ன, அதற்கான பிரச்சனைகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் குறும்படம் இயக்கப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டம் சிவகிரி மலையில் உற்பத்தியாகி முல்லை ஆற்றில் சேரும் தண்ணீர்தான் முல்லை பெரியாறு அணைக்கு வருகிறது. முல்லை பெரியாறு அணையின் உரி்மை, இயக்கம், பராமரிப்பு தமிழக பொதுபணித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணையும், நதியும் தான் கேரளாவில் உள்ளது.
முல்லை பெரியாறில் இருந்து வரும் தண்ணீர் சுருளி ஆற்றில் கலந்து 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 10 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமும், 60 லட்சம் மக்கள் குடிநீர் ஆதாராமாகவும் முல்லை பெரியாறு திகழ்கிறது. முல்லை பெரியாறு அணை அவசர கால நடவடிக்கை, இடைக்கால நடவடிக்கை, நீண்ட கால நடவடிக்கை என மூன்று நடவடிக்கைகளால் பலப்படுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அணை பலப்படுத்தப்பட்டுள்ளதால் நீர் மட்டத்தை உயர்த்தலாம். கடந்த 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம். இதற்கு கேரள அரசு இடையூறு விளைவிக்க கூடாது என்ற போதும் 2006ம் ஆண்டு கேரள சட்டசபையில் புதிய சட்டத்தை கொண்டு வந்து நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு தடை போட்டு விட்டது.
கரிகால் சோழன் கட்டிய கல்லணை 1500 ஆண்டுகள் பழமையானது. சீனாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணைகள் உறுதியாக உள்ளன. முல்லை பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டதால் எந்த ஆபத்தும் இல்லை என்றபோதிலும் கேரள அரசு அணை உடையும் என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. கேரளாவுக்கு உணவு பண்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து தான் போகின்றன. கேரளாவில் உள்ள 44 ஆற்று படுகையில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு, தனியார் கட்டிடங்களுக்கு தமிழகத்தில் இருந்துதான் மணல் போகிறது. எனவே தமிழகம் வளமாக இருந்தால் தான் அதன்மூலம் கேரளாவுக்கு உதவிகள் கிடைக்கும். இவ்வாறு குறும்படத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications