'ஓட்டுக்கு நோட்டு' விவகாரம்: எல்லா விஷயும் எனக்குத் தெரியும், கூறுகிறார் அமர்சிங்
இது தொடர்பான வழக்கில் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர்சிங் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலையாகி வெளியேவந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு அனைத்தும் தெரியும் என்றும், கோர்ட்டில் வழக்கு உள்ளதால் முழுமையாக சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அமர்சிங். அப்போது அவர் கூறுகையில், எனக்கு இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துத் தகவல்களும் தெரியும். ஆனால் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் அதை முழுமையாக வெளியிட இயலாது.
எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. என் மீது சமாஜ்வாடி கட்சியினர் சிலர் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர். ஆனால் அதற்கு நான் பதிலளிக்கப் போவதில்லை. நீதித்துறையை மட்டுமே நான் நம்புகிறேன்.
எனது சிறுநீரகப் பிரச்சினை தொடர்பான சிகிச்சைக்காக நவம்பர் 15 அல்லது 16ம் தேதி நான் சிங்கப்பூர் செல்கிறேன்.
எனது டாக்டர் அமெரிக்காவுக்குப் போயுள்ளதால் எனது பயணம் தாமதமாகியுள்ளது. எனது பயணம் குறித்த முழு விவரங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து விட்டே செல்வேன் என்றார் சிங்.