பிடிவாரண்ட்- அதிமுக முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏக்கள் கோர்ட்டில் சரண்
சேலம்: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அதிமுக முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏக்கள் இன்று சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எம்.கே.செல்வராஜ்.
இவரும், முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம் உள்ளிட்ட அதிமுகவினர் சிலரும் கடந்த 2006ம் ஆண்டு திமுகவை, விமர்சித்து ஜெயலலிதா பேசிய பேச்சுக்களின் விவரங்களை நோட்டீசாக வினியோகம் செய்தனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்த போது திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் பெரும் மோதல் ஏற்பட்டது. இப் பிரச்சனை தொடர்பாக இவர்கள் மீதும் 5 அதிமுகவினர் மீதும் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு சேலம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை ஒருமுறை கூட முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏக்கள் நேரில் ஆஜராகவில்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஸ்ரீவித்யா முன் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏக்களோ, வழக்கறிஞர்களோ யாரும் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் உள்பட 7 பேரையும் கைது செய்து கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கைதாவதில் இருந்து தப்ப இன்று காலை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் சரணடைந்தனர். அவர்களுடைய மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஸ்ரீவித்யா, மாலை 3.30 மணி வரை நீதிமன்றத்தில் நிற்க வைத்தப் பிறகே அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வழக்கின் விசாரணையை 14 நாட்களுக்கு தள்ளி வைத்தார்.