கச்சா எண்ணெய் வாங்க காசில்ல! - அடுத்த விலை உயர்வுக்கு அடிபோடும் எண்ணெய் நிறுவனங்கள்
இதன் மூலம் மேலும் மேலும் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பணம் இல்லை என்று கூறுவதன் மூலம், இறக்குமதி தடைபடும் என்பதால் அடுத்தடுத்த மாதங்களில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்கின்றன. அவற்றின் 2வது காலாண்டு (ஜூலை - செப்டம்பர் 2011) நிதி நிலை முடிவுகள் வெளியாகி வருகிறது.
மிகப் பெரிய நிறுவனமான இந்தியன் ஆயில் இதுவரை இல்லாத அளவு ரூ.7,486 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைத்து (?!) விற்பதால் ஏற்பட்ட கடந்த 6 மாத இழப்பான ரூ.11,757 கோடியில் இதுவரை மத்திய அரசு எந்த இழப்பீடும் தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது இந்த நிறுவனம்
இதே நிலைதான் மற்ற 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து வந்தன. இப்போது இந்தியன் ஆயிலின் வங்கி கடன் நிலுவை ரூ.73,000 கோடியை தாண்டி விட்டது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த முடியாத நிலை மற்றும் கம்பெனியின் மோசமான நிதி நிலை காரணமாக வங்கிகள் இனி கடன் அளிக்க தயக்கம் காட்டுகின்றன.
இதனால், நிதி நெருக்கடியில் எண்ணெய் நிறுவனங்கள் சிக்கியுள்ளதால் டிசம்பர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபடும் என்று ஐஓசி தலைவர் படோலா நேற்று தெரிவித்தார். கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டால் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டி வரும். அதன் தொடர்ச்சியாக பற்றாக்குறை ஏற்பட்டு பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் சப்ளை அடுத்தடுத்த மாதங்களில் பாதிக்கப்படும் என்றார்.
ஆனால், பெட்ரோல் விற்பனையில் இவை அனைத்துமே நல்ல லாபம் ஈட்டுகின்றன. சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் விற்பனையில் கிடைத்த உபரி லாபத்தை வைத்து, டீசல் விற்பனை நஷ்டத்தை ஈடுகட்டுவதாகக் கூட தெரிவித்தன. ஆனால் இப்போது அனைத்திலுமே நஷ்டம் என்று கணக்கு காட்டுகின்றன.
அதே நேரம், அரசு நிறுவனங்களுடன் போட்டி போட்டிக் கொண்டு பெட்ரோல், டீசல் விற்கும் ஷெல், எஸ்ஸார், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் ஈட்டி வருகின்றன.