'கிரண் பேடி விமான டிக்கெட் மோசடி செஞ்சிருக்கக் கூடாது...'- கேஜ்ரிவால்; 'யோசிச்சுப் பேசு!' - பேடி
அன்னா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு வருவதால், ஊழல் எதிர்ப்புக்கான தகுதியையும், அதற்கான ஆதரவையும் இந்த இயக்கம் வேகமாக இழந்துவருகிறது. ஹஸாரேவின் முன்னுக்குப் பின் முரணான பேச்சுகள், இதுவரை அவரை ஆதரித்து வந்த தலைவர்களையும் விலக வைத்துள்ளது.
சமீபத்தில், விமான பயணத்துக்கான டிக்கெட் முறைகேட்டில் சிக்கினார் கிரண் பேடி. இவர் ஹஸாரே குழுவில் முக்கிய உறுப்பினர். சாதாரண சலுகைக் கட்டணத்தில் பயணித்துவிட்டு, உயர் வகுப்பில் பயணித்ததாகக் கூறி பல மடங்கு தொகையை அழைப்பாளர்களிடமிருந்து வசூலித்துள்ளார். இந்த கட்டணத்தை திருப்பிக் கொடுப்பதாக பின்னர் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து அந்த இயக்கத்தை சேர்ந்த அரவிந்த கெஜ்ரிவால், தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில், "கிரண் பேடி இப்படிச் செய்திருக்க கூடாது. இது தவறுதான். மீண்டும் இத்தகைய தவறு நடைபெறாது என்று அவர் கூறியுள்ளார். நானாக இருந்தால் கிரண் பேடி செய்த தவறை செய்திருக்க மாட்டேன்.
அதே நேரத்தில் கிரண்பேடி செய்தது, டெக்னிகலான தவறு மட்டுமே. அந்த தவறின் மூலமாக, தனிப்பட்ட முறையில் எந்தவித பண ஆதாயத்தையும் அவர் பெறவில்லை.
அன்னா ஹசாரே குழுவை சேர்ந்தவர்கள் மீது அவதூறு பரப்ப மத்திய அரசு முயற்சிக்கிறது. அன்னா ஹசாரேயை எங்களிடம் இருந்து பிரிப்பதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகிறது,'' என்றார்.
'யோசிச்சுப் பேசு'
கேஜ்ரிவாலின் இந்த கருத்து கிரண்பேடியை கோபப்படுத்தியுள்ளது.
'எந்த விவகாரம் அல்லது விஷயத்திலும் கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் கொஞ்சம் யோசித்துப் பேசவேண்டும். ஒரு அறிக்கை அல்லது கருத்து கூறும் முன் பலமுறை யோசித்து விட்டு கேஜ்ரிவால் கருத்து கூற வேண்டும். தெரியாம பேசக் கூடாது. என் விஷயத்தில் என்ன நடந்தது என்று கேஜ்ரிவாலுக்கு தெரியாது,' என்று என்று கேஜ்ரிவாலுக்கு பதில் கூறியுள்ளார் கிரண் பேடி.
அண்மைக் காலமாக இவர்கள் இருவரின் மீடியா பேச்சுக்களால் அண்ணா ஹசாரே குழுவே பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளது.
இதனால் இந்த இருவரையும் அன்னா குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.