மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை வெகுண்டெழ வைத்த சிபிஎஸ்இ குளறுபடி! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரிசல்ட் வெளியான நாள் நந்தினி சிங்குக்கு மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது. கணினித் திரையில் தெரிந்த அந்தச் சில எண்கள், கடந்த சில ஆண்டுகளாக அவர் ரத்தம் சிந்திப் படித்த உழைப்பை ஒரே நொடியில் காலி செய்துவிட்டன. வேதியியல் பாடத்தில் செஞ்சுரி அடிப்பேன் என்று நம்பியவருக்குக் கிடைத்தது பேரதிர்ச்சி. "இது நான் எழுதிய விடைத்தாள்தானா?" என்ற கேள்விதான் கத்தியாய் நெஞ்சைக் குத்தியது.

மறுமதிப்பீட்டுக்கான காலக்கெடு அதற்குள் முடிந்துபோயிருந்தது. அடுத்தகட்டப் படிப்புக்கான கனவுகள் கையில் இருந்து நழுவிப்போவது தெரிந்தும், மீட்க வழியில்லை. இது நந்தினியின் கதை மட்டுமல்ல, இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் குமுறல். பிப்ரவரி 17 தொடங்கி ஏப்ரல் 10 வரை வியர்வை சிந்தி எழுதிய தேர்வுகளின் பலன், மே 13 அன்று வெளியான ரிசல்ட்டில் சின்னாபின்னமாகியிருந்தது. டிஜிட்டல் முறையிலான விடைத்தாள் திருத்தத்தில் நடந்த குளறுபடிகள், மாணவர்களின் வாழ்க்கையை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?

ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்: என்னதான் நடந்தது?

ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் - பெயரே ஏதோ நவீன தொழில்நுட்பமாகத் தெரிந்தாலும், பின்னணியில் நடந்ததோ பெரும் குளறுபடி. விடைத்தாள்கள் ஸ்கேன், அப்லோட், பிறகு ஆன்லைன் திருத்தம் என சிஸ்டம் மாறியது. ஆனால் ஸ்கேன் செய்த பிம்பங்கள் மங்கலாக இருந்தன, சர்வர் அடிக்கடி டவுன் ஆனது. இதற்கெல்லாம் சி.பி.எஸ்.இ. தேர்வு செய்தது ஒரு தனியார் நிறுவனத்தை.

'கோயம்ப்ட் எடு டெக்' (Coempt Edutech). இந்த நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யவே இவ்வளவு மெனக்கெட்டதா வாரியம்? கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்தி, தகுதியற்ற ஒரு நிறுவனத்திடம் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை ஒப்படைத்ததன் மர்மம் என்ன?

இந்த நிறுவனத்தின் மீதுதான் ஏற்கனவே கரும்புள்ளிகள் இருந்தன. மற்றொரு பெயரில் இயங்கி இதேபோன்ற கோல்மால்களைச் செய்ததாகப் புகார் உண்டு. ஆனால், சி.பி.எஸ்.இ. இதையெல்லாம் கவனிக்கத் தவறியது.

அதிகார வர்க்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்டது மாணவர்கள் தான். வேதாந்த் ஸ்ரீவஸ்தவா. தனக்கு வந்த விடைத்தாள் வேறொருவருடையது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதுவரை "எல்லாம் சரிதான்" எனச் சொல்லிவந்த சி.பி.எஸ்.இ., வேதாந்தின் ஆதாரத்திற்குப் பின் வேறு வழியின்றி மன்னிப்பு கேட்டு, திருத்தப்பட்ட மதிப்பெண்களை வழங்கியது.

சார்த்தக் சிதாந்த் என்ன செய்தார் தெரியுமா? இந்த 'கோயம்ப்ட்' நிறுவனத்தின் வண்டவாளங்களை எல்லாம் தோண்டி எடுத்தார். அது தகுதியற்ற நிறுவனம் என்பதை ஆதாரத்துடன் வலைப்பதிவில் அம்பலப்படுத்தினார்.

நிசர்கா அதிகாரி தேர்வு இணையதளத்தின் பாதுகாப்பு ஓட்டைகளை உடைத்து, தேர்வாளராக உள்ளே நுழைந்து மதிப்பெண்களை மாற்றிவிட முடியும் என நிரூபித்து, அதிகார மட்டத்தை அலற வைத்தார்.

அரசியல் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள்

இன்று சி.பி.எஸ்.இ. தாள்களில் மையைவிட, மாணவர்களின் கண்ணீர்தான் அதிகம் படிந்திருக்கிறது. அரசியல் தலைவர்களோ ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் முழக்கம்.

ராகுல் காந்தி "இது ஒரு திட்டமிட்ட மறைப்பு (Cover-up)" எனச் சாடியுள்ளார். கெஜ்ரிவாலோ "மாணவர்களின் காயத்தில் உப்புத் தேய்க்கும் செயல்" என்கிறார். ஆனால் இவர்களின் அரசியல் பஞ்சாயத்துகளைத் தாண்டி, பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை என்ன?

"நான் எழுதிய விடைத்தாள் சரியாகத்தான் திருத்தப்பட்டதா?" என்ற அந்த ஒரு கேள்வியை இதயத்தில் சுமந்துகொண்டு, பல மாணவர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் பயத்துடன் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை சி.பி.எஸ்.இ. கைகழுவிவிட்டது. காயம்பட்ட மாணவர்களின் மனவோட்டத்தை யார் ஆற்றுவார்கள்? தேர்வு முறையின் மீதே பெரும் சந்தேகத்தை விதைத்துவிட்டு, அதிகாரிகள் அமைதி காப்பதுதான் இந்த நாடகத்தின் உச்சகட்ட துயரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+