எரிபொருள் விலை உயர்வை ரயில்வேயால் இனி தாங்க முடியாது - கட்டணம் உயரும்! - மத்திய அமைச்சர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ரயில் கட்டணங்களின் விலை உயர்த்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திவேதி தெரிவித்துள்ளார். இதன் மூலம் எரிபொருள் உயரும் போதெல்லாம் ரயில்கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவினை வாபஸ் பெறப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வு குறித்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், எரிபொருள் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிப்பதாக உள்ளதாகத் தெரிவித்தார். இந்த விலை உயர்வினால் ரயில்வே துறையும் பாதிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப ரயில்வே கட்டணங்களை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் சமயங்களில் ரயில்வே கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது குறித்து ரயில்வே துறை ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் திவேதி தெரிவித்துள்ளார். இதனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப இனி ரெயில் கட்டணங்களில் மாற்றம் உண்டாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications