மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: இரவோடு, இரவாக பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக அரசு கடந்த 8ம் தேதி் அன்று இரவோடு, இரவாக மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை திடீர் என்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் நலப் பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தான் அதிமுக அரசு இவ்வாறு செய்துள்ளது என்று கூறிய திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், திடீர் பணிநீக்கத்தைக் கண்டித்து இன்று(15ம் தேதி) மாவட்ட தலைநகரங்களில் திமுக இளைஞர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதேபோல் இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
திடீர் என்று பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை மீ்ண்டும் பணியமர்த்த வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் போராட்டத்தின் முதல் கட்டம் தான். அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். அப்படியும் ஜெயலலிதா அரசு கண்டுகொள்ளாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.
ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகவே அதிமுக அரசு மக்களுக்கு விரோதமாக நடந்து வருகின்றது என்றார்.