சிறையிலிருந்தே 2 இதய நோயாளிகளுக்கு ரூ.1 லட்சம் பெற்று தந்த ராசா
சென்னை: திகார் சிறையில் இருந்து கொண்டே தனது தொகுதியைச் சேர்ந்த இருவருக்கு இதய நோய் சிகிச்சை பெறுவதற்காக பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பணம் வாங்கிக் கொடுத்துள்ளார் முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ. ராசா.
முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ. ராசா 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 2ம் தேதியில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தான் சிறையில் இருந்தாலும் தனது தொகுயில் என்ன நடக்கின்றது என்பதை உதவியாளர் மூலம் தெரிந்து கொள்கிறார்.
ராசாவின் உதவியாளர் மக்களின் கோரிக்கைகளை பெற்று திகாருக்கு அனுப்பி வைக்கிறார். அதைப் பார்த்து ராசா நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர் சிறையில் இருந்து கொண்டே மக்கள் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கோத்தகிரியைச் சேர்ந்த ரவிசெல்வன் என்பவரின் குழந்தை பரணிதரன், அன்னூரைச் சேர்ந்த நாகராஜ் ஆகியோர் இதய நோயால் அவதிப்படுகின்றனர். தங்களின் சிகிச்சைக்கு உதவுமாறு ராசாவுக்கு கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கையை பரிசீலித்த ராசா அவற்றை பிரதமருக்கு பரிந்துரைத்து பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து அந்த இருவருக்கும் தலா ரூ. 50,000 சிகிச்சைக்காக வாங்கித் தந்துள்ளார்.