ஒபாமா சொன்னதால் இந்தியாவுக்கு யுரேனியம் தர ஆஸ்திரேலியா ஒப்புதல்?!
மெல்போர்ன்: இந்திய அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்குவது என்ற ஆஸ்திரேலிய நாட்டின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலகில் மிக அதிகமான யுரேனிய தாது கொண்டுள்ள நாடு ஆஸ்திரேலியா. அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்குப் பின்னரும் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா தொடர்ந்து பல நிபந்தனைகளைப் போட்டு வந்தது.
Australia Group எனப்படும் ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒப்பந்த நாடுகள், இந்தியாவுக்கு யுரேனியம் தர எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சர்களும் அதிகாரிகளும் பலமுறை ஆஸ்திரேலியாவுடன் பேச்சு நடத்தியதையடுத்து, ஒருவழியாக இந்திய அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்க அந்த நாடு ஒப்புக் கொண்டது. இதற்கான அறிவிப்பை இரு தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியா வெளியிட்டது.
அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றே இந்தியாவுக்கு யுரேனியம் தர ஆஸ்திரேலியா சம்மதித்தாக ஆஸ்திரேலியா பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்த நாட்டின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஆஸ்திரேலியாவின் இந்த அறிவிப்பு அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்றதாக உள்ளது. அணு சக்தித்துறையில் இந்தியா மிகப்பெரிய நாடாக உள்ளது. இந்தத் துறையில் இந்திய, ஆஸ்திரேலிய நாடுகளின் நல்லுறவு அவசியம்.
அமெரிக்கா கேட்டுக் கொண்டதன் பேரில்தான் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டது என்பது தவறு. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் யோசனை ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்டுக்குத் தேவைப்படாது என்றார்.
பிரதமர் இந்தோனேசியா பயணம்-ஒபாமாவை சந்திக்கிறார்:
இந் நிலையில் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெறும் 9வது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டிலும் 6வது கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டிலும் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் இன்று இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார்.
இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் சீன பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரை மன்மோகன் சந்தித்துப் பேசுகிறார்.
இதையடுத்து சிங்கப்பூர் செல்லும் பிரதமர் இரு நாட்டு உறவுகள், வர்த்தக மேம்பாடு குறித்து அந் நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.