சிங்கப்பூரில் இருந்து ரூ.3.5 லட்சம் வாஸ்து மீன்களை கடத்தி வந்த 2 பேர் கைது
சென்னை: சிங்கப்பூரில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள வாஸ்து மீன்களை கடத்தி வந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கினர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வாஸ்து மீன்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் உத்தரவுப்படி, அதிகாரிகள் குழுவினர் இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திறங்கிய விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது சிவகங்கையை சேர்ந்த சாகுல் அமீது (30), சென்னை, மாதவரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (28) ஆகியோர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்றுவிட்டு 4 சூட்கேஸ்களுடன் வந்தனர். அவர்களைத் தடுத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சுங்கவரி செலுத்தும் பொருட்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று கூறிய 2 பேரும் விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றனர்.
அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்கள் கொண்டு வந்த சூட்கேஸ்களை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது சூட்கேஸ்களில் உயிருள்ள பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சூட்கேஸ்களை திறந்து பார்த்த போது, பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட நீரில் 825 வாஸ்து மீன்கள் இருந்தது. இந்த மீன்களின் சர்வதேச மதிப்பு ரூ.3.5 லட்சம் ஆகும். இந்த மீன்கள் எந்தவித சான்றிதழும் இல்லாமல் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கடத்தி வரப்பட்ட மீன்களை பறிமுதல் அதிகாரிகள், சாகுல் அமீது, பாலசுப்பிரமணியன் ஆகியோரை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் கூறியதாவது,
விமானத்தில் கொண்டு வரும் முன் வாஸ்து மீன்களுக்கு நோய் கிருமிகள் தாக்கம் எதுவும் இல்லை என்று விலங்கியல் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து முறையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் சிங்கப்பூர் மீன் வளத்துறை அதிகாரியிடமும், இந்திய விலங்கியல் துறையிடமும் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
உரிய சான்றிதழ் இல்லாமல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் மீன்களால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே அவை பறிமுதல் செய்யப்பட்டு, மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது, என்றார்.