டிஎன்பிஎஸ்சி இணைச் செயலாளர், ஊழியர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்ட்!
இந்தத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலமே தமிழக அரசுப் பதவிகளான குரூப் 1 , குரூப் 2 அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தத் தேர்வில் முறைகேடு நடப்பதாக புகார் எழுவது வழக்கம்.
இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இயக்குனர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை மற்றும் திருச்சியில் அந்த ரெய்டுகள் நடந்தன.
அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இவர்கள் மீது இந்திய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீன் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் சோதனையில் முக்கிய ஆவணங்களை வைத்து அறிக்கை தயார் செய்த அதிகாரிகள் அதில் டிஎன்பிஎஸ்சியில் பணிபுரியும் பல அலுவலர்களுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. இணைச் செயலாளர் மைக்கேல் ஜெரால்ட், கீழநிலை செயலாளர் ரவி இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் உஷா, ராமமூர்த்தி, லோகநாதன், பாலாஜி, ராதாகிருஷ்ணன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் நேர்முக உதவியாளர் சதீஷ்குமார் மற்றும் சுகுமாரன் ஆகியோர் உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
மொத்தம் 14 இடங்களில் இந்தச் சோதனைகள் நடக்கின்றன.