மே. வங்கத்திற்கு மட்டும் மத்திய அரசு அள்ளித் தருவதால்தான் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது-ஜெ.

பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்து ஜெயா டிவியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அவர் பேசும்போது,
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் தங்களது இன்றியமையாப் பணியை மக்களுக்கு தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கான வழிவகைகள் குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, “வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்" என்ற பழமொழிக்கேற்ப சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எனது தலைமையிலான அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலோட்டமாக பார்க்கும் போது, அவை பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்தால், அது அவ்வாறு அல்ல என்பது விளங்கும். முற்றிலுமாக முடங்கிப் போயுள்ள நிறுவனங்களை கைதூக்கி விடவில்லை என்றால், இந்த நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும்.
டீசல் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்கின்ற நிலையில், சிறப்புக் கடன் உதவி என்ற வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாயைக் கூட அளிக்காத நிலையில், மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசு கோரிய 1000 மெகாவாட் மின்சாரத்தை கூட வழங்காத நிலையில், தமிழக அரசே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பொதுத் துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட வைக்க தமிழக மக்களாகிய உங்களிடம் அல்லாமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?
கடனில் மூழ்கியிருக்கும் தமிழ்நாடு கேட்ட உதவித் தொகையில் ஒருரூபாயைக் கூட மத்திய அரசு தரவில்லை. அதேசமயம், தனது அரசுக்கு ஆதரவு தரும் கட்சியான திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் ரூ. 21,614 கோடியை அள்ளித் தந்துள்ளது.
எத்தனை முறை கேட்டாலும், தமிழ்நாட்டிற்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்? முந்தைய மைனாரிட்டி திமுக அரசு, தமிழ்நாட்டை முற்றிலுமாக சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்ட சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தமிழக மக்களாகிய நீங்கள், ஆட்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள்.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டை சீரமைக்க, மத்திய அரசு ஓரளவிற்காவது உதவி செய்யும் என்று எதிர்பார்த்து கடந்த 6 மாத காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்து, கைவிட்டுவிட்ட நிலையில், எனதருமை தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?
எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலிலதா.












Click it and Unblock the Notifications