2ஜி ஆவணங்களைப் பெற்றார் சாமி-சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரம் என தகவல்
இதையடுத்து, ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கு இது போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது என்று சாமி கூறியுள்ளார்.
2ஜி வழக்கில், ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார் சாமி.இதற்கான ஆதாரமாக, சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தை அவர் மேற்கோள் காட்டி வருகிறார்.
மேலும் அந்தக் கடிதங்களை தனக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் சிபிஐ கோர்ட்டில் மனு செய்தார். அதை விசாரித்த கோர்ட், சாமி கேட்கும் ஆவணங்களைத் தருமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.
சிறிய இழுபறிக்குப் பின்னர் நேற்று சாமி கேட்ட ஆவணங்களை சிபிஐ சாமியிடம் ஒப்படைத்தது. தொலைத் தொடர்புத்துறையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இவை. 400 பக்கங்களுக்கும் மேல் உள்ளது.
இந்த ஆவணங்கள் 2008ம் ஆண்டு நவம்பர் முதல் 2009ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்திற்குட்பட்டவை என்று சிபிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் இதில் ப.சிதம்பரத்தி்ற்கும், ராசாவுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து எதுவும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஆவணங்கள் குறித்து சாமி கூறுகையில், இந்த ஆவணங்கள் எனக்குத் திருப்தி தருகிறது. ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இது போதுமான ஆதாரமாகும்.
இதை முழுமையாக படித்த பின்னர் வருகிற 27 அல்லது 28ம் தேதி எனது விளக்கத்தை கோர்ட்டில் சமர்ப்பிப்பேன் என்றார்.
டிசம்பர் 3ம் தேதி சிபிஐ கோர்ட்டில் 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.