மின்வெட்டை சரி செய்யாமல், கட்டணத்தை மட்டும் உயர்த்துவார்களாம்: தா. பாண்டியன் குற்றச்சாட்டு
திருவாரூர்: மின்வெட்டை சரிசெய்யாமல் மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறார் என்பது தற்போதைய நிலையில் சத்தியமாக யாருக்கும் புரியவில்லை. தீவிர ஜெயலலிதா விசுவாசியான தா.பாண்டியன், சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடம் கூட கொடுக்கப்படாமல் அதிமுகவால் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் தேமுதிகவுடன் கூட்டணிக்குப் போனார். போன வேகத்தில் ஜகா வாங்கி விட்டார்.
அதன் பிறகும் கூட தொடர்ந்து ஜெயலலிதா ஆதரவு பேச்சையே உதிர்த்து வரும் தா.பாண்டியன், தற்போது ஜெயலலிதாவைக் கண்டிப்பது போல ஒரு பேச்சு பேசியுள்ளார்.
திருவாரூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பால் விலை, பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொது மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாங்கள் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து அதிமுக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்.
பால் விலை, பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் பால் வாங்காத வீடே இருக்க முடியாது. இந்நிலையில் பால் விலை ரூ. 7க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
பணக்காரர்கள் பேருந்துகளைத் தேடமாட்டார்கள். அடித்தட்டு மக்கள் தான் பேருந்துகளில் பயணிக்கின்றனர். தற்போதுள்ள கட்டணத்தை வைத்துப் பார்க்கையில் பேருந்தில் செல்பவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.100 செலவு செய்ய வேண்டியுள்ளது, மாதம் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை செலவு செய்ய வேண்டிய கட்டயாத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மின்வெட்டை சரிசெய்த பாடில்லை. மின்வெட்டை சரிசெய்த பிறகு கட்டணம் உயர்த்தப்படும் என்றால் கூட மக்கள் சகித்துக் கொள்வார்கள். ஆனால் மின் பற்றாக்குறையும் இருக்குமாம், கட்டணமும் உயர்த்தப்படுமாம். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications