விலை உயர்வைக் கண்டித்து உண்ணாவிரதம்- மதுரையில் கூட்டம் காட்டிய தேமுதிக
மதுரை: பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து மதுரையில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தேமுதிக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். விஜயகாந்திற்கு மதுரை சொந்த மண் என்பதால் மற்ற ஊர்களை விட மதுரையில் சற்று அதிக அளவிலான தொண்டர்கள் திரண்டு வந்தனர்.
தமிழ்நாடு அரசு நிதிப்பற்றாக்குறையை காரணம் கூறி கடந்த வாரம் பால்விலை, பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு பொதுமக்களும், எதிர்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதிமுக வின் கூட்டணியில் உள்ள, பிரதான எதிர்கட்சியான தேமுதிக முதன் முறையாக ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. விலை உயர்வுக்கு எதிராக சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
மதுரை மாஸ் அதிகம்
இதேபோல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை சொந்த ஊர் என்பதாலும், ஜெயலலிதாவுக்கு ஒரு மாஸ் காட்ட வேண்டும் என்பதாலும், மதுரையில் அதிகமானோர் பங்கேற்க வேண்டும் என்றும் தனது கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருந்தார். இதன்படி தேமுதிக மாநில பொருளாளர் சுந்தரராஜன் எம்எல்ஏ தலைமையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேமுதிகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். தென் மாவட்ட எம்எல்ஏக்கள் பலரும் உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.
விமர்சித்து பேச்சு
இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்று பேசியவர்கள் பெரும்பாலும் அதிமுகவை விமர்சித்து பேசியுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் தலைவர் விஜயகாந்துடன் ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரம் பேர் வரை பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.