முல்லைப்பெரியாறு அணை உடைப்போகிறது: வந்த கேரள பஸ்களில் விஷமப் போஸ்டர்கள்
தேனி: முல்லைப்பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அதனால் 30 லட்சம் பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கேரளாவில் இருந்து தமிழகத்தி்ற்கு வந்த பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை போலீஸார் கிழித்தெறிந்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேரள அரசோ அதை சற்றும் கண்டு கொள்ளாமல், முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அணை கட்டியே தீருவோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தீர்க்கமாக உள்ளார்.
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை உடைந்து அதனால் ஏற்படும் அபாயங்களை சித்தரித்து மலையாள இயக்குனர் சோஹன் ராய் டேம் 999 என்ற படத்தை எடுத்து பீதியைக் கிளப்பியுள்ளார். இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த படத்தை தமிழக அரசு தடை செய்துள்ளது.
இந்த சூழலில் கேரளாவைச் சேர்ந்த சில அமைப்புகள் முல்லைப்பெரியாறு அணை உடையும் அபாயத்தில் இருப்பதாகவும், அதனால் 30 லட்சம் பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கேரளாவில் இருந்து தமிழகத்தி்ற்கு வரும் பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தன.
நேற்றிரவு தமிழக எல்லைப் பகுதிகளான தேனி மாவட்டத்தின் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச் சாவடிகளில் இருந்த தமிழக போலீசார் பேருந்துகளில் முல்லைப்பெரியாறு அணை பற்றி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர். கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி அதில் இருந்த போஸ்டர்களை அகற்றும் பணி நேற்று இரவு முழுவதும் நடந்தது.
அப்படியே அவர்கள் கண்ணில் படாமல் அந்த போஸ்டர்களுடன் சில பேருந்துகள் தமிழகத்திற்குள் வந்தால், அந்த போஸ்டர்களை ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி சோதனைச் சாவடிகளில் வைத்து அகற்றிட போலீசாருக்கு தேனி மாவட்ட எஸ்பி பிரவீண்குமார் உத்தரவிட்டிருந்தார்.