டைகூன் எம்பயர் இண்டர்நேஷனல் நிறுவனம் மீது புகார் தரலாம்: டி.எஸ்.பி. அறிவிப்பு
திண்டுக்கல்: சென்னை "டைகூன் எம்பயர் இண்டர்நேஷனல்' என்ற நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தரலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு டைக்கூன் எம்பயர் இன்டர்நேஷனல் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஆன்லைன் மூலம் பல கவர்ச்சிக்கரமான திட்டங்களை வெளியிட்டதால், நாடு முழுவதுமிருந்து ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில் பலருக்கு அறிவித்தபடி பணத்தை திரும்ப அளிக்கவில்லை என்று புகார்கள் வந்தன.
இதனையடுத்து அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் வந்து பார்த்த போது, நிறுவன அலுவலகம் பூட்டி கிடந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கேரளாவை சேர்ந்த நிறுவன நிர்வாகிகள் கமலகண்ணன், சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் 'டைகூன் எம்பயர் இண்டர்நேஷனல்' மூலம் ரூ.1,000 கோடி வரை மோசடி ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இன்பமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சென்னை 'டைகூன் எம்பயர் இண்டர்நேஷனல்' என்ற நிதி நிறுவனத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், மாத வட்டி 8,500 கிடைக்கும் எனவும், ஒரு முதலீட்டாளரை அறிமுகப்படுத்தினால் 10 சதவீத கமிஷன் கிடைக்கும் எனவும் கூறினர். இதனால் இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.
பொது மக்களிடம் பெற்ற முதலீடு தொகையுடன் சென்னை "டைகூன் எம்பயர் இண்டர்நேஷனல்' என்ற நிதி நிறுவனம் நடத்தியவர்கள் தலைமறைவாகி விட்டனர். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சியை சேர்ந்தவர்கள் அதிக முதலீடு செய்துள்ளனர். இது குறித்து திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தரலாம்.
கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி என்று மண்டலங்களாக பிரித்து புகார் மனுக்கள் மீது துரித விசாரணை நடக்கும், என்றார்.