30 கோடியில் கோடியில் புதிய கிராம சுகாதார நிலையங்கள்! - ஜெ. அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களை தரம் உயர்த்தவும், புதிய 20 சுகாதார நிலையங்களை ஏற்படுத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக ஊரகப்பகுதிகளில், சுகாதார வசதி இல்லாத கிராமங்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதன் அடிப்படையில் 30 படுக்கைகள் கொண்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த, முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
7 கோடியே 71 லட்சம்
இதன்படி திருச்சி சுகாதார மாவட்டம், மணச்சநல்லூர் வட்டாரத்திலுள்ள சமயபுரம்; வேலூர் சுகாதார மாவட்டம், வேலூர் வட்டாரத்தில் உள்ள கொனவட்டம், வாலாஜா வட்டாரத்தில் உள்ள சுமை தாங்கி; கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் உள்ள பேஜிபள்ளி; கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம், திருநாவலூர் வட்டாரத்திலுள்ள சேந்தநாடு; சின்ன சேலம் வட்டாரத்திலுள்ள அம்மாகளத்தூர்; நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள மதிரவேலூர்; திருப்பூர் சுகாதார மாவட்டம், பல்லடம் வட்டாரத்திலுள்ள புளியம்பட்டி உள்ளிட்ட 20 இடங்களில் புதியதாக ரூ. 7 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
சுகாதார நிலையங்கள் தரம் உயர்கிறது
மருத்துவ கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள ஆரம்ப சுகாதா நிலையங்களை அனைத்து வசதிகளுடன் கூடிய 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள் ஆகிய வசதிகள் கொண்ட ஆரம்பர சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தவும், முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இதன்படி, அறந்தாங்கி சுகாதார மாவட்டம், கரம்பகுடி வட்டாரம் மலையூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; செய்யார் சுகாதார மாவட்டம், அனுக்காவூர் வட்டாரம், அக்கூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரம், நல்லாட்டிபாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 22 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு, தரம் உயர்த்தப்படும்.
இவ்வாறு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலமும், தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதன் மூலமும், கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே நவீன மருத்துவ வசதிகளைப் பெற்று நோயற்ற வாழ்வு வாழ வழிவகுக்கும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.