முரசொலி நாளிதழுக்கு இந்திய ஜனநாயக வாலிபர்கள் சங்கம் கண்டனம்!
திருப்பூர்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்ததாக செய்தி வெளியிட்டதற்காக முரசொலிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.வடிவேல், ஒன்றியச் செயலாளர் ஆ.சிகாமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சி 28வது வார்டு பாரதி நகர் பகுதியில் சி.சுப்பிரமணி என்பவர் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர் என்று நவம்பர் 22ம் தேதி முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மேற்படி செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
40 வயதுக்கு உட்பட்டோரே வாலிபர் சங்க உறுப்பினராக இருக்க முடியும் என்ற நிலையில், 50 வயதை நெருங்கிய நபர் எந்த வகையிலும் வாலிபர் சங்க உறுப்பினராகவோ, பொறுப்பாளராகவோ இருக்க வாய்ப்பில்லை.
அப்படியிருக்க நாகரிகமற்ற முறையில் தவறான செய்தியை வெளியிட்ட முரசொலி நாளிதழுக்கு மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம், என்று அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.