பருவமழை தீவிரம்- வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம்- மழை தொடரும்
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாக மழை கொட்டிவருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போன்று தேங்கியுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வியாழக்கிழமை முதல் தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்து. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் பள்ளங்களாகியுள்ள சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
மிதக்கும் குடியிறுப்புகள்
சென்னையில் வியாசர்பாடி, கொட்டிவாக்கம், புறநகர் பகுதியான மடிப்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வட சென்னையில் குளம் போல மாறியுள்ள சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழைமரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
குற்றாலத்தில் குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதியில் விடிய விடிய மழை பெய்துவருவதால் குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அங்கு இன்று அதிகாலை முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
3வது நாளாக தொடர்மழை பெய்துவருவதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, ராமநாதபுரம், தேனி,சிவகங்கை, புதுக்கோட்டை, விழுப்புரம்,தஞ்சாவூர், நாகை, கடலூர், திருநெல்வேலி, கரூர், கன்னியாகுமரி,தருமபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
மீண்டும் மழை பெய்யும்
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு, மிகபலத்த மழை பெய்யக்கூடும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக, திருவாடானையில், 20 செ.மீ., சென்னை விமான நிலையத்தில், 10 செ.மீ., மழை பதிவாகியது.தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடலில், மிகக் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு மிகபலத்த மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.