தலாய் லாமா பங்கேற்கும் புத்த மாநாடு- சீன மிரட்டலால் இந்தியத் தலைவர்கள் ஆப்சென்ட்
டெல்லி: டெல்லியில் நடைபெற உள்ள புத்தமத மாநாட்டில் தலாய் லாமா பங்கேற்பதை சீன அரசு கடுமையாக ஆட்சேபித்துள்ளதால், இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியத் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
தலாய் லாமா இந்த மாநாட்டில் பங்கேற்பதை தடை செய்ய வேண்டும் என்று சீனா கோரியது. இதை இந்தியா ஏற்கவில்லை. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டு அது தள்ளிப் போடப்பட்டது.
இந்த நிலையில், புத்தமதத்தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு, டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட அழைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் குடியரசுத் தலைவரும், பிரதமரும் வரவில்லை என்று கூறி விட்டனர். அதேபோல ஷீலா தீட்சித், சுஷ்மா சுவராஜும் தொடக்க விழாவுக்கு வரவில்லை.
இருப்பினும் மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான கரண் சிங் தொடக்க விழாவில் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்தியா நிராகரிப்பு
இந்த மாநாட்டில் உலக புத்தமத தலைவர் தலாய்லாமா பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். ஆனால் தலாய்லாமா உரையாற்றுவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் இதற்கு இந்தியா உடன்படவில்லை.
தலாய்லாமா பங்கேற்பதால் இது அரசியல் நிகழ்ச்சியாகவிடாது என்று இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள புத்தமதத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் புதன்கிழமையன்று தலாய்லாமா உரையாற்றுவது உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தமாநாட்டில் 46 நாடுகளைச் சேர்ந்த 900 த்திற்கும் மேற்பட்ட புத்தபிட்சுகளும், மதத்தலைவர்களும் பங்கேற்கின்றனர். மங்கோலியா, இலங்கை, பூடான், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து கரண் சிங் கூறுகையில், இதில் சர்ச்சைக்கு என்ன இருக்கிறது. இந்த மாநாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தலாய்லாமா உரையாற்றி வருகிறார். எனவே இதில் அரசியலை இணைத்துப் பார்க்கக் கூடாது என்றார்.
நாலந்தா புணரமைக்கப்படும்
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் புத்தமதத்தை நினைவு கூறும் புத்தகயா, சாரநாத், தவாங் உள்ளிட்ட இடங்களையும், நேபாளத்தில் உள்ள லும்பினி ஆகிய இடங்களையும் காண எண்ணற்ற சுற்றுலா பயணிக்கள் வந்து செல்வதாகவும் குறிப்பிட்டார். பழமை வாய்ந்த நாலந்தா பல்கலைக்கழகத்தை அண்டை நாடுகளின் உதவியோடு மீண்டும் புணரமைக்கப்படும் என்றார்.