கோவையில் திடீர் மர்ம காய்ச்சல் - 26 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
கோவை: கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் பயிலும் மாணவிகளை மர்ம காய்ச்சல் தாக்கியுள்ளது. திடீரென பரவிய மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் நர்சிங் துறை மாணவிகளுக்கான பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இதில், மொத்தம் 650 மாணவிகள், மருத்துவமனை வளாகத்தில் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நர்சிங் பயிலும் மாணவிகளை திடீர் மர்ம காய்ச்சல் தாக்கியது. 26 மாணவிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு மாணவி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ கல்லூரிக்கு விடுமுறை
மர்மக் காய்ச்சலுக்குக் காரணம் தெரியாத நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மேலும் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.