'நல்லா ஆழமாவும் அகலமாவும் வெட்டுங்க'.. இது ஞானதேசிகனின் உபதேசம்
சென்னை: தமிழகத்தில் பெரும் மழை பெய்யும்போதெல்லாம் பெருமளவிலான நீர் வீணாகிறது. இந்த நீரைத் தேக்கி வைக்க எந்தவித வசதியும் இல்லாதது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வேதனை தெரிவித்துள்ளார். இவற்றைத் தேக்கி வைக்க புதிதாக ஏரிகள், குளங்களை வெட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பெரும் மழை வெள்ளம் காரணமாக அனைத்து நகரங்களும் குறிப்பாக கிராமங்களும் மிகக்கடுமையாக பாதித்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளன. தினமும் உழைத்து உண்ணும் ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் வருவாயின்றி வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக் கணக்கான கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இணைப்புச் சாலைகள் பெயர்ந்தும், கண்மாய்கள் பாதித்தும் போக்குவரத்துக்கு பெரிதும் தடையாகி உள்ளன. இயற்கைச் சீற்றத்தின் இக்கொடுமையான நிலையிலிருந்து மக்களை பாதுக்காக்க தொடர்ந்து தொய்வின்றி அனைத்து நிவாரணப் பணிகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.
கிராமப்புறங்களிலுள்ள ஏரிகளும், குளங்களும் இது போன்ற பெருமழை நீரால் நிரம்பி வழிந்து உபரி நீராக பெருக்கெடுத்து ஓடுவதை தடுத்து எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் கவனம் மேற்கொள்ள வேண்டும். அதன்படி ஏரிகள், குளங்கள் தற்போதுள்ள அளவை விட தேவைக்கேற்ப அகலமாகவும், ஆழமாகவும் வெட்ட வேண்டும்.
மேலும் புதிய ஏரிகள், குளங்கள் உருவாக்கப்படுவது அவசியம். இப்பணிகளுக்காக மத்திய அரசின் நீர்நிலை அமைச்சகத்திடம் தமிழக அரசு உரிய நிதியை கேட்டுப் பெற வேண்டும். அவற்றின் மூலம் உபரி நீரை தேக்கி வைத்தால் எதிர்காலத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பெரிதும் பயன்படும்.
நகர்ப்புறங்களில் கழிவுநீர் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படாததாலும், தரமான சாலைகள் அமைக்கப்படாததாலும், நீர் தேங்கி பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே அவற்றைப் போக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, நகரங்களில் மழை காரணமாக தேங்கும் உபரிநீரை உரிய வகையில் தேக்கி வைத்து அந்நீர் மக்களுக்கு பயன்பட நடவடிக்கை எடுப்பது அவசியம்.
ஏரி, குளங்களின் நிலங்களில் கட்டிடம் மற்றும் வேறு சில பயன்பாட்டிற்காக ஆக்கிரமிப்பு செய்வதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.