நாடாளுமன்றத்திற்கு வெளியே தமிழக, கேரள எம்.பிக்கள் சரமாரி கோஷம்-பரபரப்பு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை ஆதரித்தும், எதிர்த்தும், தமிழக, கேரள எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே சரமாரியாக கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும், புதிய அணையை கட்ட வேண்டும் என்று கேரளா கூறி வருகிறது. ஆனால் நாறாண்டுகளைத் தாண்டியும் வலுவுடன் இருக்கும் அணையை உடைக்கக் கூடாது என்று தமிழகம் போராடி வருகிறது.
இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேரள எம்.பிக்கள் நேற்று தர்ணா நடத்தினர். பல்வேறு மாநில எம்.பிக்களிடம் தமிழகம் குறித்து குறை கூறி ஆதரவு திரட்டினர். ஆனால் தமிழக எம்.பிக்கள் நேற்று இதுகுறித்து எதையும் பேசவில்லை, செய்யவில்லை.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலை அறுகே கேரள எம்.பிக்கள் கூடி கோஷமிட்டனர். இதைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பிக்களும் அங்கு கூடி கேரளாவைக் கண்டித்து கோஷமிட்டனர்.
இரு மாநில எம்.பிக்களும் சரமாரியாக அருகருகே நின்றபடி கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வயலார் ரவி அங்கு விரைந்து வந்தார். இரு மாநில எம்.பிக்களையும் அவர் சமாதானப்படுத்தினார். பின்னர் இரு மாநில எம்.பிக்களும் கலைந்து சென்றனர்.